ADDED : ஏப் 11, 2024 05:15 AM
கலபுரகி: கடந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு, 50,000க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்ற நிதின் குத்தேதார், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
கலபுரகி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தலைவரான மாலிகய்யா குத்தேதார், முதலில் காங்கிரசில் இருந்தார்.
தற்போது, பா.ஜ.,வில் உள்ளார். இவரது தம்பி நிதின் குத்தேதார், பா.ஜ.,வுடன் அடையாளம் காணப்பட்டார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், கலபுரகி தொகுதியில் பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டார். 50,000க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றார்.
லோக்சபா தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்களை காங்கிரஸ் இழுத்து வருகிறது. நிதின் குத்தேதாரை காங்கிரசுக்கு இழுக்க முயற்சித்தது. ஆனால், முடியவில்லை. பா.ஜ.,விலும் சேர்த்துக்கொள்ள முயற்சி நடந்தது. இவரை கட்சியில் சேர்க்க, மாலிகய்யா குத்தேதார் உட்பட சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை பொருட்படுத்தாமல், அவர் பா.ஜ.,வில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெங்களூரின், மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில், மாநில தலைவர் விஜயேந்திரா, ரவி முன்னிலையில் நிதின் குத்தேதார், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
பின் அவர் கூறியதாவது:
விஜயேந்திராவும், ரவியும் என் மீது நம்பிக்கை வைத்து, பா.ஜ.,வில் என்னை சேர்த்தனர். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபடுவேன். நரேந்திர மோடியை, மீண்டும் பிரதமராக்க வேண்டும். கலபுரகியில் கட்சியை பலப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

