ம.பி.,யில் 3-வது காங்., எம்.எல்.ஏ பா.ஜ.,வில் ஐக்கியம்
ம.பி.,யில் 3-வது காங்., எம்.எல்.ஏ பா.ஜ.,வில் ஐக்கியம்
UPDATED : மே 05, 2024 07:07 PM
ADDED : மே 05, 2024 07:00 PM

போபால்: மாநிலத்தில் காங்., ஆட்சியில் இல்லை, அதனால் வளர்ச்சியும் இல்லை என ம.பி., மாநிலத்தில் பா,ஜ.வில் சேர்ந்த மூன்றாவது காங்., எம்.எல்.ஏ.,வான நிர்மலா சுப்ரே கூறி உள்ளார்.
நாடு முழுவதற்குமான பொது தேர்தல் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முறையாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டன.
இருப்பினும் மார்ச் மாதம் 29-ம் தேதி ம,பி., மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள அமர்வாரா தொகுதி காங்., எம்.எல்.ஏ., கமலேஷ் ஷா பா,ஜ,வில் இணைந்து கட்சி மாறுதலை துவக்கி வைத்தார்.
இதனிடையே கடந்த ஏப்., 19-ம் தேதி முதற்கட்ட தேர்தல் ம.பி.,யி்ல் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அடுத்த கட்டமாக வரும் 7-ம் தேதி மூன்றாம் கட்டம், 13-ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் மாநிலத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து கடந்த ஏப்.,30 ம் தேதி இரண்டாவது காங்., எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் என்பவர் பா.ஜ.வில் இணைந்தார்.
தற்போது இன்று ( மே.,5-ம் தேதி) பினா சட்டசபை தொகுதி காங்., எம்.எல்.ஏவான நிர்மலா சுப்ரே பா.ஜ.,வில் இணைந்துள்ளார். மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ரஹத்கர் என்ற இடத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பா.ஜ., முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் நிர்மலா சுப்ரே பா.ஜ.,வில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநிலத்தில் தற்போது காங்., ஆட்சியில் இல்லை, எதிர்கட்சிக்கு வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை. தனது தொகுதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தேன். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை, எனவே பா,ஜ.,வில் இணைந்தேன். பிரதமர் மற்றும் முதல்வர் மோகன்யாதவ் தலைமையில் நான் வளர்ச்சி நீரோட்டத்தில் இணைந்தேன் என அவர் விளக்கம் அளித்து உள்ளார்.