விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்: ரேவண்ணாவுக்கு மீண்டும் சிக்கல்
விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்: ரேவண்ணாவுக்கு மீண்டும் சிக்கல்
ADDED : ஜூன் 02, 2024 09:40 PM

பெங்களூரு: வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், ஜாமினில் இருக்கும் எம்.எல்.ஏ., ரேவண்ணாவுக்கு, மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விசாரணைக்கு ஆஜராக, கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
5 நாட்களுக்குள்...
ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. மைசூரு கே.ஆர்.நகரை சேர்ந்த, வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீது விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில் ரேவண்ணாவுக்கு அளித்த ஜாமினை ரத்து செய்ய கோரி, சிறப்பு புலனாய்வு குழு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித், ஐந்து நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக, ரேவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
நோட்டீஸ் கிடைத்ததும் வக்கீலுடன் சேர்ந்து, ஆஜராக வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதனால் ரேவண்ணாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
வக்கீல்கள் தொடர்பு
இந்த வழக்கில் ரேவண்ணா மனைவி பவானியும், விசாரணைக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுக்கிறார். தலைமறைவாக உள்ள அவரை, நேற்று முன்தினம் இரவு மைசூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில், சிறப்பு புலனாய்வு குழு தேடியது.
ஆனால் அவர் சிக்கவில்லை. வக்கீல்களுடன் மட்டும், பவானி தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், முன்ஜாமின் தள்ளுபடி ஆனதால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. முன்ஜாமின் கிடைத்த பின்னர், சிறப்பு புலனாய்வு குழு முன் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்றும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று அளித்த பேட்டியில், ''வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராக இரண்டு முறை சம்மன் கொடுத்தும், பவானி ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய, சிறப்பு புலனாய்வு குழு தேடுகிறது,'' என்றார்.