சாலையில் குப்பை வீசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை
சாலையில் குப்பை வீசியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை
ADDED : ஆக 10, 2024 06:32 AM

மாதநாயக்கனஹள்ளி: சாலையில் குப்பை வீசியதை தட்டி கேட்ட, முதியவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
துமகூரு ஷிராவை சேர்ந்தவர் புனித், 24. பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே மாதநாயக்கனஹள்ளியில் வாடகை வீட்டில் தாயுடன் தங்கி இருந்து, தொழிற்சாலையில் வேலை செய்தார்.
நேற்று காலை 9:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள சாலையில் குப்பை வீசியதுடன், குட்காவை மென்று எச்சிலை துப்பினார். அந்த வழியாக நடந்து சென்ற சித்தப்பா, 70 என்பவர், புனித்தை தட்டி கேட்டார்.
கோபம் அடைந்த புனித், சித்தப்பாவிடம் தகராறில் ஈடுபட்டார். பின், வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து, சித்தப்பாவின் கழுத்தை அறுத்தார்.
ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சித்தப்பா இறந்தார். பட்டப்பகலில் நடந்த கொலையை பார்த்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். புனித்தை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி சென்று விட்டார்.
சிக்கபிதரகல்லுவில் உள்ள சகோதரர் வீட்டில் பதுங்கி இருந்த புனித்தை நேற்று மாலை, மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்தனர்.
கொலையான சித்தப்பா, தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பெயரில் 10 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு வீட்டு வாழ்க்கை நடத்தி வந்தார்.

