
பணம் வாங்குவது தவறு
தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக, ஓட்டு போடணும். நல்லவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்ய, ஒவ்வொருவரின் ஓட்டும் முக்கியம். யாரும் 'மிஸ்' பண்ண கூடாது. பணம் வாங்கி கொண்டு, ஓட்டு போடுவது தவறு.
- அண்ணாமலை
எஸ்.இ.டி.சி., சாந்திநகர் பஸ் நிலைய பொறுப்பாளர்
==========
இப்போது 100 சதவீத ஓட்டுகள் பதிவாவது இல்லை. நாம் ஓட்டு போட்டு என்ன நடக்க போகிறது என்று நினைப்பதை, மக்கள் கைவிட வேண்டும். ராணுவத்தில் சேர்ந்து தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று இல்லை. ஓட்டு போட்டும் நாட்டை காப்பாற்றலாம்.
- மனிஷ்
சட்ட கல்லுாரி மாணவர், அத்திப்பள்ளி
============
மக்கள் தங்கள் உரிமையான ஓட்டை கண்டிப்பாக, பதிவு செய்ய வேண்டும். எந்த கட்சிக்கு வேண்டும் என்றாலும், ஓட்டு போடட்டும். ஆனால் ஓட்டு போடாமல் மட்டும் இருக்கவே கூடாது. அப்படி செய்தால் நமது உரிமையை விட்டு கொடுத்தது போன்றது.
- ராமசந்திரன்
முதல்வர், பாபுஜி ஓட்டுனர் பயிற்சி பள்ளி, ராஜாஜிநகர்
========
நாம் தேர்வு செய்யும் நபரால், மக்களுக்கு நல்லது நடக்குமா என்பதை, நாம் கண்முன்பு ஒரு நிமிடம் கொண்டு வர வேண்டும். நமக்கு இவர் தான் சரியானவர் என்று தோன்றும் நபருக்கு, ஓட்டு போட வேண்டும். வளர்ச்சி தானே முக்கியம்.
- ராஜேஷ்
மருந்து கடை உரிமையாளர், ராஜாஜிநகர்
=============
சரியாக 100 சதவீதம் ஓட்டு அளித்தால் தான், நாட்டிற்கு முன்னேற்றம் ஏற்படும். அனைத்து தேர்தலிலும் 100 சதவீத ஓட்டு பதிவாவது இல்லை. சரியான நபர், மக்கள் பிரதிநிதியாக தேர்வு ஆகிறாரா என்று தெரியவில்லை. வேட்பாளர் தகுதியை பார்த்து அவரை தேர்வு செய்ய வேண்டும்.
- ரகுராமன்
தலைமை கட்டுப்பாடு மேலாளர், தென்மேற்கு ரயில்வே
============
நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், மக்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும். நமக்காக வேலை செய்யும், எம்.பி.,யை தேர்வு செய்ய வேண்டும். ஓட்டு போடுவது நமது உரிமை. ஓட்டு போட்டால் தான் தவறு செய்யும், மக்கள் பிரதிநிதிகளை நேருக்கு, நேர் கேள்வி கேட்க முடியும்.
- டாக்டர். சுவேதா,
மாநகராட்சி மருத்துவமனை, ராஜாஜிநகர்
===========
ஓட்டு போடுவது நமது உரிமை. இதை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு தர கூடாது. ஓட்டு போடாவிட்டால், இந்திய குடிமகனாக நமது கடமையை ஆற்றவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.
-கர்னல் ராஜேந்திரன் (ஓய்வு)
இந்திய ராணுவம், எலக்ட்ரானிக் சிட்டி
=============
ஓட்டு, மக்களின் தலைவிதியை மாற்றும் ஆயுதம். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி அடைந்த வேட்பாளர்களை பற்றி, நாம் கேள்விப்பட்டு இருப்போம். எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மக்கள் தேர்வு செய்யும் அரசு ஊழியர். லோக்சபா தேர்தல் மிக முக்கியமான ஒன்று. நாடு சம்பந்தப்பட்ட தேர்தல்.
- நரசிம்மமூர்த்தி,
மனித உரிமை ஆர்வலர், ஜோகுபாளையா
==========
நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது, நமது கையில் உள்ளது. ஓட்டு போடுவது நமது பொறுப்பு, உரிமை ஆகும். நம் ஓட்டு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், சரியான நபரை எம்.பி.,யாக தேர்வு செய்ய வேண்டும்.
- திவ்யா
இல்லத்தரசி, காமாட்சிபாளையா
***

