அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர மத்திய அரசின் 58 ஆண்டு தடை நீக்கம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர மத்திய அரசின் 58 ஆண்டு தடை நீக்கம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
ADDED : ஜூலை 23, 2024 01:39 AM
புதுடில்லி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் அரசு ஊழியர்கள் இணைவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தில் அரசு ஊழியர்கள் இணைய 1966 நவ., 30ல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மத்திய அரசு கடந்த 9ம் தேதி நீக்கியது.
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அமித் மால்வியா வெளியிட்டு உள்ள அறிக்கை:
பசு வதைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கம் இணைந்து 1966 நவ., 7ல் பார்லிமென்ட் வளாகத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்தின. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் அரசு ஊழியர்கள் இணைய, அப்போதைய பிரதமர் இந்திரா தடை விதித்தார்.
அரசியலமைப்புக்கு எதிராக, 58 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீக்கியுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
மஹாத்மா காந்தி படுகொலைக்கு பின், 1948 பிப்ரவரியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு சர்தார் வல்லபபாய் படேல் தடை விதித்தார். அதன்பின் நல்ல நடத்தைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து தடை விலக்கப்பட்டது.
அதன் பின்னரும் கூட, மூவர்ண கொடியை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. 1966ல் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைய தடை விதிக்கப்பட்டது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட இந்த உத்தரவு நீக்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4க்கு பின், பிரதமர் மோடி - ஆர்.எஸ்.எஸ்., உறவில் பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே, 58 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், 'மற்ற அரசியல் கட்சிகள், அமைப்புகளில் உள்ளவர்கள் அரசு ஊழியர்களாக பணியாற்ற அனுமதிக்கப்படும்போது, ஆர்.எஸ்.எஸ்.,சில் இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கக் கூடாது என கூறுவதில், எந்த நியாயமும் இல்லை. இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது' என்றனர்.