ADDED : ஆக 08, 2024 11:58 PM

பெங்களூரு: ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில், பெங்களூரின் விதான் சவுதாவில், நேற்று மதியம் ஆலோசனை கூட்டம் நடந்தது. காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர துணை முதல்வரும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் பெங்களூருக்கு வந்தார். விதான் சவுதாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், காவிரி இல்லத்துக்கு சென்ற பவன் கல்யாண், முதல்வர் சித்தராமையாவை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானும் உடன் இருந்தார்.
முதல்வரை சந்தித்த பின், வனத்துறை கூட்டத்தில் பங்கேற்க, விதான் சவுதாவுக்கு வந்தார். இங்கு பணியாற்றும் ஊழியர்கள், பவன் கல்யாணுடன் செல்பி எடுத்துக் கொள்ள போட்டி போட்டனர்.