மக்கள் எங்களை ஆதரிப்பார்கள்; உண்மை வெல்லும்: பிரியங்கா நம்பிக்கை
மக்கள் எங்களை ஆதரிப்பார்கள்; உண்மை வெல்லும்: பிரியங்கா நம்பிக்கை
ADDED : ஏப் 07, 2024 03:00 PM

புதுடில்லி: மக்கள் எங்களை ஆதரிப்பார்கள், உண்மை வெல்லும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில், லோக்சபா தேர்தலுடன், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இது குறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது: ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களையும் சந்தித்தேன். அவர்களின் ஒற்றுமை, கடின உழைப்பு மற்றும் மக்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நான் பெருமைப்படுகிறேன்.
பொய் சாம்ராஜ்யம்
ஹிமாச்சல பிரதேசத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில மக்கள் தனது கட்சிக்கு ஆதரவளிப்பார்கள். உண்மை வெல்லும். ஒரு பக்கம் பயம், பேராசை மற்றும் பொய்களின் சாம்ராஜ்யத்தை பா.ஜ., கொண்டுள்ளது.
உண்மை வெல்லும்
பணபலம் மற்றும் விசாரணை அமைப்புகள் (வருமான வரித்துறை, ஈடி, சி.பி.ஐ.,) மூலம் அதிகாரத்தைத் தேடுவது ஜனநாயகத்தை அழிக்கும் அரசியலாகும். மறுபுறம், உண்மை, தைரியம் மற்றும் பொறுமையுடன் மக்களுக்காக அயராது உழைக்கும் உறுதியை காங்கிரஸ் கொண்டுள்ளது. பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள், உண்மை வெல்லும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

