அதுல ஜெயிக்க வச்சாங்க! இதிலும் ஜெயிக்க வைப்பாங்க! நம்பி களம் இறங்கிய வினேஷ்
அதுல ஜெயிக்க வச்சாங்க! இதிலும் ஜெயிக்க வைப்பாங்க! நம்பி களம் இறங்கிய வினேஷ்
ADDED : செப் 10, 2024 01:58 PM

சண்டிகர்; மல்யுத்தத்தில் வெற்றியை தந்த மக்கள், தேர்தல் களத்திலும் தமக்கு வெற்றியைத் தருவார்கள் என்று காங்கிரஸ் வேட்பாளரும், விளையாட்டு வீராங்கனையுமான வினேஷ் போகத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைக்கான தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் அக்டோபர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி இருக்கின்றன.
தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுகிறார். அவர் ஜூலானா தொகுதியில் களம் இறங்குகிறார். அவரின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் முழு வீச்சில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஜூலானா தொகுதியில் மக்களிடம் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து வினேஷ் போகத் கூறியதாவது; இந்த மக்களாகிய நீங்கள் தான் என்னை மல்யுத்தத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். கடவுள், உடன்பிறந்தவர்கள் இல்லாமல் நான் இங்கே இல்லை. எனது செயல்களின் உத்வேகமே அவர்கள் தான். அவர்களின் ஆசிர்வாதமும் எனக்கு இருக்கிறது.
மக்கள் நிச்சயமாக எனக்கு வெற்றியை தருவார்கள். மல்யுத்தத்தில் நான் பெற்ற வெற்றி எல்லாம் அவர்கள் அளித்ததே. இம்முறை தேர்தலிலும் அதே வெற்றியை மக்கள் எனக்கு அளிப்பார்கள் என்று கூறினார்.