ADDED : ஆக 08, 2024 10:17 PM

பெங்களூரு: நிலம் முழுதும் பரவலாக கனமழை பெய்கிறது. ஆனால், 67 சதவீதம் ஏரிகளுக்கு போதுமான தண்ணீர் வராததால், நிரம்பவில்லை. எனவே அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு, ஏரிகளை நிரப்ப சிறிய நீர்ப்பாசனத்துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் போசராஜு கூறியதாவது:
மாநிலத்தின் பல மாவட்டங்களில், கன மழை பெய்கிறது. மழையின் அளவு அதிகரித்ததால், பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. ஆனால் இவ்வளவு மழை பெய்தும், 67 சதவீதம் ஏரிகள் நிரம்பவில்லை என, அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.
அணைகளில் நீர் இருப்பு அதிகரித்ததால், ஏரிகளை நிரப்பும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மழை நீடிப்பதால் அணைகளுக்கு, தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கிறது. எனவே அணைகளை திறந்து விட்டு, ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏரிகளை நிரப்பும் ஏற்ற நீர்ப்பாசன திட்டத்தை, மீண்டும் செயல்படுத்துவதுடன், இதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து, அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகள் நிரம்பினால் விவசாயிகளுக்கும், கிராமப்புறங்களில் குடிநீருக்கும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.