ADDED : ஆக 26, 2024 11:29 PM

ஹாபூர்: உத்தர பிரதேசத்தில் மொபைல் போன் காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்க வந்தவரிடம், போலீசார், ஜிலேபியை லஞ்சமாக கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து 91 கி.மீ., துாரத்தில் ஹாபூர் மாவட்டத்தில் கன்னோர் என்ற பகுதி உள்ளது.
இங்கு வசிக்கும் சஞ்சல் என்ற இளைஞர் மருந்து கடைக்கு சென்ற போது, அவரது மொபைல் போன் காணாமல் போனது.
யாரேனும் திருடிச் சென்றிருக்கலாம் என கருதிய அவர், இது குறித்து புகாரளிக்க ஹாபூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சமீபத்தில் சென்றார்.
அங்கு, மொபைல் போன் காணாமல் போனது குறித்த புகாரைப் பெற வேண்டுமானால், 1 கிலோ ஜிலேபி வாங்கி வர வேண்டும் என, போலீசார் சஞ்சலை வலியுறுத்தியுள்ளனர்.
பல மணி நேரம் கெஞ்சியும், போலீசார் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த நிலையில், கடைக்கு சென்று 1 கிலோ ஜிலேபியை வாங்கி தந்தார்.
அதன் பிறகே சஞ்சலின் புகாரை போலீசார் பதிவு செய்தனர்.
சமீபத்தில், இம்மாநிலத்தில் விவசாயி ஒருவரிடம் எஸ்.ஐ., ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்டார்.
அதேபோல், குடும்ப தகராறை தீர்த்து வைக்க போலீஸ்காரர் ஒருவர் கணவன் - மனைவியிடம் 'ஏர் கூலரை' லஞ்சமாக கேட்ட நிகழ்வும் நடந்தது.

