இரவில் போலீசார் நடந்தே ரோந்து பணி: மைசூரு தசராவுக்காக முன்னெச்சரிக்கை
இரவில் போலீசார் நடந்தே ரோந்து பணி: மைசூரு தசராவுக்காக முன்னெச்சரிக்கை
ADDED : செப் 03, 2024 05:50 AM

மைசூரு : மைசூரு தசரா திருவிழாவை முன்னிட்டு, இரவு நேரத்தில் குற்றச்சம்பவங்கள் நடக்காத வகையில், போலீசார் நடந்தே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறியதாவது:
தசராவை ஒட்டி, நகருக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருவர்.
இந்நேரத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பது போலீசாரின் கடமை. கடந்த 25 நாட்களாகவே நகரில் இரவு நேரத்தில் போலீசார் நடந்தே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றச்சம்பவங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது. அத்துடன், ஆட்டோ ஓட்டுனர்களும் அதிக தொகை வசூலிக்காமல் இருப்பர்.
குற்றச்சம்பவம் நடந்தால், உடனடியாக போலீசார் அங்கு செல்ல வசதியாக இருக்கும்.
ஏ.சி.பி.,க்கள், டி.சி.பி.,க்கள் மேற்பார்வையில், அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில், அந்தந்த நிலைய எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபடுவர். தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரையிலும்; இரவு 7:00 முதல் 11:00 மணி வரையிலும் ரோந்துப் பணி நடக்கும். கூடுதலாக இரவுப் பணி போலீசாரும் ரோந்தில் ஈடுபடுவர்.
பொது இடம், கூட்டம் நிறைந்த இடங்களில் குற்றச்சம்பவங்கள் தடுக்க, கூடுதலாக ரோந்துப்பணியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த நான்கைந்து நாட்களாக, சந்தேகப்படும் வகையில் நடந்து கொள்வோரை விசாரித்து, எச்சரித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு தொந்தரவு கொடுத்ததாக, காலை நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.
3_DMR_0009
இரவு நேர ரோந்துப் பணியின்போது பொதுமக்களிடம் விசாரித்த போலீசார். இடம்: மைசூரு.