பெரியாறு அணை பற்றி பொய் பிரசாரம் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவு
பெரியாறு அணை பற்றி பொய் பிரசாரம் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவு
ADDED : ஆக 13, 2024 02:17 AM

மூணாறு,:''முல்லை பெரியாறு அணை குறித்து பரப்பப்படும் பொய் பிரசாரங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும். தேவையற்ற ரீதியிலும், பயமுறுத்தும் வகையிலும் பதிவிடுவோர் கட்டுப்படுத்தப்படுவர்,'' என, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின், முல்லை பெரியாறு அணை விவகாரம் மாநிலத்தில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 'அணை உடைந்து விடும்; புதிய அணை கட்ட வேண்டும்' என பல தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருவதால், அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு நிலுவை
இந்நிலையில், இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் இந்த அணை தொடர்பாக ஆலோசனை கூட்டம், நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் நேற்று நடந்தது.
இடுக்கி எம்.பி., டீன் குரியாகோஸ் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின், அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறியதாவது:
முல்லை பெரியாறில் கேரளாவுக்கு புதிய அணை தேவை. இப்பிரச்னையில் கட்சி, அரசியல் பாகுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். அணை தொடர்பாக தமிழகம், கேரளா இடையே வழக்கு நிலுவையில் உள்ளது. அது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் கேரளாவுக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு விரைவில் வரும்.
ஒருங்கிணைப்பு
இப்பிரச்னை குறித்து, நீதிமன்றம் அல்லாமல் வெளியே பேச்சு நடத்தி தீர்வு காண முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அணை மேலாண்மையை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அதற்கு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்படும்.
முல்லை பெரியாறு அணை குறித்து பரப்பப்படும் பொய் பிரசாரங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும். தேவையற்ற ரீதியிலும் பயமுறுத்தும் வகையிலும் பதிவிடுவோர் கட்டுப்படுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக திட்டத்தை தயாரித்து, அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

