வாயை மூட போலீசார் பணம் தர முயன்றனர் கோல்கட்டா பெண் டாக்டரின் பெற்றோர் பகீர்
வாயை மூட போலீசார் பணம் தர முயன்றனர் கோல்கட்டா பெண் டாக்டரின் பெற்றோர் பகீர்
ADDED : செப் 06, 2024 02:13 AM

கோல்கட்டா :கோல்கட்டா பயிற்சி டாக்டர் பலாத்கார படுகொலை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே போலீசார் பல உண்மைகளை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், தங்களுக்கு பணம் கொடுத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்க முயன்றதாகவும், கொலையான பெண் டாக்டரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த மாதம் 9ம் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்தில், உயிரிழந்த பெண் பயிற்சி டாக்டரின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
அப்போது, அவர்கள் வைத்த குற்றச்சாட்டு:
எங்கள் மகள் கொலையான அன்று எங்களை அணுகிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், வெள்ளை தாளில் கையெழுத்து போடும்படி கூறி பணம் கொடுக்க முயன்றார். அதை உடனடியாக மறுத்தோம்.
ஆரம்பம் முதலே பல உண்மைகளை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். எங்கள் மகள் உடலை பார்க்க முதலில் அனுமதிக்கவில்லை. பல மணி நேரம் காக்க வைத்தனர். உடலை ஒப்படைத்ததும் உடனடியாக இறுதி சடங்கு செய்யும்படி அழுத்தம் கொடுத்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக, திரிணமுல் காங்., தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் தேபாங்ஷு பட்டாச்சார்யா, 'வீடியோ' ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு பேர் பேசும் குரல் பதிவாகி உள்ளது. அது, படுகொலை செய்யப்பட்ட பயிற்சி டாக்டரின் பெற்றோர் குரல் என கூறப்படுகிறது.
அதில், 'எங்களுக்கு நீதி வேண்டும்; போலீசார் எங்களுக்கு பணம் எதுவும் அளிக்கவில்லை' என, அவர்கள் பேசுவது தெளிவாக கேட்கின்றன. ஆனால், அது பெற்றோர் குரல் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்து பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா வெளியிட்டு உள்ள பதிவு:
கொலையான பயிற்சி டாக்டரின் பெற்றோரிடம் வழக்கை வாபஸ் பெறும்படி கூறி, வடக்கு கோல்கட்டாவின் போலீஸ் துணை கமிஷனர் பணம் கொடுத்துள்ளார்.
இப்போது இப்படி ஒரு வீடியோ வெளியிட மம்தாவுக்கு வெட்கமாக இல்லையா?
மம்தாவும், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலும் பதவி விலகாவிட்டால், இந்த விசாரணை நியாயமாக நடக்காது.
அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெற்றோர் எழுப்பும் சில கேள்விகள்!
1 எங்கள் மகள் தற்கொலை செய்ததாக அதிகாரிகள் முதலில் கூறியது ஏன்?
2 மகளின் உடலை பார்க்க எங்களை மூன்று மணி நேரம் காக்க வைத்தது ஏன்?
3 உடற்கூராய்வு மற்றும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன்?
4 ஆரம்பத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தது ஏன்?
5 மருத்துவமனை தரப்பு ஏழு மணி நேரம் எங்களை தொடர்பு கொள்ளாதது ஏன்?