ADDED : ஏப் 18, 2024 04:08 AM

மாண்டியா, : ''அரசியல் எனக்கு புதிது இல்லை,'' என, மாண்டியா காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு கூறி உள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாண்டியாவில் என்னை எதிர்த்துப் போட்டியிடும், குமாரசாமி இரண்டு முறை முதல்வராக இருந்திருக்கலாம். அதனால் எனக்கு பிரச்னை இல்லை. எனது குடும்பத்திலும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி., உள்ளனர். அரசியல் எனக்கு புதிது இல்லை. அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் எனக்கு தொடர்பு உண்டு.
அமைச்சர் செலுவராயசாமி எனது சகோதரர் போன்றவர். மாண்டியா மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் ஆதரவு என்கு உள்ளது. 'ஒற்றுமையே வலிமை' என்று நம்புகிறேன். எதிராளி பலசாலியாக இருந்தாலும், ஒற்றுமையுடன் அவரை எதிர்கொள்வோம்.
நான், ஆதிசுஞ்சனகிரி கல்லுாரியில் படித்தவன். நிர்மலானந்தநாத சுவாமி ஆசியுடன் தேர்தலில் போட்டியிடுகிறேன். மாண்டியா இப்போது ம.ஜ.த., கோட்டை இல்லை; காங்கிரஸ் வசம் உள்ளது.
மாண்டியா லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், ஏழு தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அரசின் வாக்குறுதித் திட்டங்களால், மக்கள் காங்கிரசை ஆதரிப்பர்.
கர்நாடகாவில் பிரதமர் மோடி அலை இல்லை; காங்கிரஸ் அரசின் வாக்குறுதி அலை உள்ளது. நாகமங்களாவில் பிறந்து வளர்ந்தேன். பெங்களூரு சென்று கட்டுமான நிறுவனங்கள் நடத்துகிறேன். எனது நிறுவனங்களில் 4,000 பேர் வேலை செய்கின்றனர். மாண்டியாவில் வீடு வாங்கி குடியேறி உள்ளேன்.
எனது வீட்டின் கதவு, மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். அதிர்ஷ்டத்தை விட கடுமையான உழைப்பை நம்புகிறேன். பொது சேவை செய்ய வந்துள்ளேன். என்னை அர்ப்பணித்து மக்களுக்காக உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

