31ல் எஸ்.ஐ.டி., முன் ஆஜராகிறார் பிரஜ்வல் 1 மாதத்துக்கு பின் வீடியோ வெளியிட்டு உறுதி
31ல் எஸ்.ஐ.டி., முன் ஆஜராகிறார் பிரஜ்வல் 1 மாதத்துக்கு பின் வீடியோ வெளியிட்டு உறுதி
ADDED : மே 28, 2024 06:24 AM

பெங்களூரு: பலாத்கார வழக்கில் சிக்கிய, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, ஒரு மாதத்துக்கு பின், வீடியோ வெளியிட்டுள்ளார். வரும் 31ம் தேதி, சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராவதாக தெரிவித்துள்ளார்.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவர், சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மாநிலத்தில் முதல் கட்ட லோக்சபா தேர்தல் நடந்த ஏப்ரல் 26ம் தேதி இரவே, துாதரக பாஸ்போர்ட் பயன்படுத்தி, ஜெர்மனிக்கு சென்றார். அதற்குள், ஹாசன், மாண்டியா, பெங்களூரு ரூரல் என சில மாவட்டங்களில், ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்களை வாக்காளர்களுக்கு மர்ம நபர்கள் வினியோகம் செய்தனர்.
சிறப்பு புலனாய்வு குழு
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
அவரது வீடு, அலுவலகம், பண்ணை வீடு, அரசு பங்களா என பல இடங்களில், பாதிக்கப்பட்ட பெண்களுடன் வந்து எஸ்.ஐ.டி., சோதனை நடத்தியது.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலை கண்டுபிடிக்க, எஸ்.ஐ.டி., கோரிக்கையின்படி, சி.பி.ஐ., தரப்பில், 'புளூ கார்னர் நோட்டீஸ்' விடுத்தது. ஆனாலும் அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அதே வேளையில், துபாய் மூலம், பெங்களூரு வருவதற்கு, இரண்டு முறை விமான டிக்கெட் முன்பதிவு செய்து, பின்னர் ரத்து செய்து விட்டார்.
வெளியுறவு துறை
விஷயம் அரசியல் ரீதியாக திசை மாறுவதை அறிந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி நாடு திரும்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை கட்டளை இட்டார். ஆனாலும் பிரஜ்வல் வரவில்லை. பின், உடனடியாக நாடு திரும்பும்படி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உத்தரவிட்டார்.
மேலும், அவரது துாதரக பஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, எஸ்.ஐ.டி., தரப்பில் மத்திய அரசுக்கும்; முதல்வர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினர். அதன்படி, விளக்கம் கேட்டு, வெளியுறவுத் துறை அமைச்சகம், பிரஜ்வலுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் நேற்று அவர் திடீரென வீடியோ வெளியிட்டார்.
மன்னிப்பு கேட்பு
அதில், பிரஜ்வல் பேசியிருப்பதாவது:
முதலாவதாக என் தந்தை, தாய், தாத்தா, குமாரசாமி, மாநில மக்கள், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெளிநாட்டில் எங்கு இருக்கிறேன் என்று தகவல் தெரிவிக்காமல் இருந்தேன். தற்போது தகவல் அளிக்கிறேன்.
ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்த போது, என் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. எஸ்.ஐ.டி.,யும் அமைக்கவில்லை. ஏப்ரல் 26ம் தேதி, நான் வெளிநாட்டுக்கு சென்றேன். அது ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம். அதன்படி சென்றேன்.
மூன்று, நான்கு நாட்களுக்கு பின், யுடியூபில் செய்தி பார்த்த போது தான், எனக்கு தகவல் தெரிந்தது. எஸ்.ஐ.டி., வழங்கிய நோட்டீசுக்கு, எக்ஸ் வலைதளம் வாயிலாகவும், எனது வழக்கறிஞர்கள் வாயிலாகவும் ஏழு நாட்கள் கால அவகாசம் கேட்டு, பதில் அளித்தேன்.
அரசியல் சூழ்ச்சி
அதற்கு அடுத்த நாளே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் உட்பட அக்கட்சி தலைவர்கள், என் விஷயத்தை பகிரங்கமாக பேச ஆரம்பித்தனர். அரசியல் சூழ்ச்சி நடப்பதை அறிந்தேன். இதனால், மன அழுத்தத்துக்கு ஆளானேன். தனிமைப்படுத்தப்பட்டேன். எனவே மன்னிப்பு கேட்கிறேன்.
ஹாசனில் விரோத சக்திகள் ஒன்றிணைந்து, எனக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர். நான் வளர்ந்து வருவதை விரும்பாமல், என் மன உறுதியை குலைக்க முயற்சித்தனர். இதை கவனித்து, நான் அதிர்ச்சி அடைந்து, ஒதுங்கி நின்றேன்.
வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.டி., முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக என் மீதான பொய் புகாரில் இருந்து வெளியே வருவேன். கடவுள், மக்கள், குடும்பத்தின் ஆசிர்வாதம் என் மீது இருக்கட்டும். நான் வந்த பின், பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவேன். அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
பிரஜ்வல் வருவதாக அவரே தெரிவித்துள்ளார். அவருக்கு ஏற்கனவே கைது வாரன்ட் பிறக்கப்பிட்டுள்ளது. எனவே அவர் கைது செய்யப்படுவார். எஸ்.ஐ.டி., என்ன நடவடிக்கை எடுக்கும் என பார்க்க வேண்டும்.
பரமேஸ்வர், அமைச்சர், உள்துறை