ADDED : ஜூன் 30, 2024 10:34 PM

பெங்களூரு : பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் எம்.பி., பிரஜ்வலை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி வழங்க கோரி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வக்கீல் மனு செய்துள்ளார்.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பலாத்கார வழக்கில் இவரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக ஐந்து நாட்கள் காவலில் எடுக்கப்பட்டார்.
ஐந்து நாட்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 8 ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.
பிரஜ்வலுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டு, வக்கீல் அருண் மனு செய்தார்.
அந்த மனுவையும் விசாரித்த நீதிபதி சிவகுமார், உங்கள் கோரிக்கையை சிறை அதிகாரிகளிடம் முன் வையுங்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதன்பின் மனு மீது விசாரணை நடத்தலாம் என்றார்.