விஜயகாந்த், சிரஞ்சீவி, வைஜெயந்திக்கு பத்ம விருது வழங்கினார் ஜனாதிபதி முர்மு
விஜயகாந்த், சிரஞ்சீவி, வைஜெயந்திக்கு பத்ம விருது வழங்கினார் ஜனாதிபதி முர்மு
ADDED : மே 10, 2024 06:09 AM

புதுடில்லி : மறைந்த நடிகர் விஜயகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான மறைந்த பாத்திமா பீவி உள்ளிட்டோருக்கான பத்ம விருதுகளை நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், குடியரசு தினத்தன்று ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன.
கலை, சமூகப்பணி, அறிவியல், பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அளிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இவற்றில், பத்ம விபூஷண் ஐந்து பேருக்கும், பத்ம பூஷண் 17 பேருக்கும், பத்ம ஸ்ரீ 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டன. இவற்றில் 30 பேர் பெண்கள். எட்டு பேர் வெளிநாட்டினர். ஒன்பது பேருக்கு மறைவுக்கு பிறகான விருது அறிவிக்கப்பட்டன.
விருது பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஏப்., 22ல் விருதுகள் வழங்கப்பட்டன. மீதியுள்ளோருக்கு டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்வில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த நடிகர் விஜயகாந்த், லடாக்கின் ஆன்மிக தலைவரான மறைந்த டாக்டர் ரின்போசே, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் கவர்னருமான மறைந்த பாத்திமா பீவி ஆகியோருக்கு மறைவுக்கு பிறகான பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. விஜயகாந்துக்கான விருதை, அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
கேரளாவைச் சேர்ந்த மூத்த பா.ஜ., தலைவர் ஓ.ராஜகோபால், 'பாம்பே சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர் ஹோர்முஸ்ஜி என் காமா, குஜராத்தின், 'ஜென்மபூமி' நாளிதழின் குழும ஆசிரியரும், தலைமை செயல் அதிகாரியுமான குந்தன் வியாஸ் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா பாலி, தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.