வளரும் நாடுகள் ஒன்றிணைய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
வளரும் நாடுகள் ஒன்றிணைய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
ADDED : ஆக 17, 2024 11:51 PM

புதுடில்லி: “பயங்கரவாதம், பிரிவினைவாதம், போர்களால் உலகெங்கும் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள, 'குளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
'வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகளுக்கான குரல் என்ற அமைப்பின் மூன்றாவது மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இதில், வளரும் நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
கொரோனா பரவல் பாதிப்பில் இருந்து இன்றும் பல நாடுகள் மீளவில்லை. இதற்கிடையே, பல்வேறு புதிய சவால்களை நாம் சந்தித்து வருகிறோம்.
பயங்கரவாதம், பிரிவினைவாதம், போர் போன்றவை வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இவை உலகெங்கும் நிச்சயமில்லாத சூழலை உருவாக்கியுள்ளன.
இந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் வளரும் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த நுாற்றாண்டில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச அமைப்புகள், சர்வதேச நிதி அமைப்புகள் தவறிவிட்டன.
அதனால், இந்த சவால்களை எதிர்கொள்ள நாம் சுயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் ஒவ்வொரு நாடும் தன் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நம் திறன்களை நாம் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதற்காக, டிஜிட்டல் கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்தி, அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதற்காக, சமூக தாக்க நிதி என்ற ஒரு நிதியை உருவாக்கிஉள்ளோம்.
இதற்கு தன் பங்களிப்பாக, இந்தியா முதல் கட்டமாக, 2-09 கோடி ரூபாய் வழங்குகிறது. இது, வளரும் நாடுகளில் டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

