மூன்றாம் பாலினத்தினருக்காக 396 கழிப்பறைகள் கட்ட திட்டம்
மூன்றாம் பாலினத்தினருக்காக 396 கழிப்பறைகள் கட்ட திட்டம்
ADDED : மே 16, 2024 01:56 AM
புதுடில்லி:மூன்றாம் பாலினத்தினருக்காக புதுடில்லியில் 396 கழிப்பறைகள் கட்ட மாநில சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு; பஞ்சாப் மாநிலம் லுாதியானா; மத்திய பிரதேச மாநிலம் போபால் உள்ளிட்ட நகரங்களில் மூன்றாம் பாலினத்தினருக்கென தனி கழிப்பறை கட்டி, நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கின்றன.
ஆனால் தேசிய தலைநகரான டில்லியில் மூன்றாம் பாலினத்தினருக்கென தனி கழிப்பறை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் 2021ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மூன்றாம் பாலினத்தினரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் கட்டும்படி பல்வேறு துறைகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டு, சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் 396 கழிப்பறைகள் கட்டுவதற்கு மாநில சமூக நலத்துறை திட்டமிட்டது.
இதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 143 பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தவிர 223 கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 30 கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சமூக நலத்துறை சார்பில் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கென ஏற்கனவே இருக்கும் 1,584 கழிப்பறைகளை மூன்றாம் பாலினத்தினரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மூன்றாம் பாலினத்தினருக்கான பொதுக்கழிப்பறைகளை கட்டுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.