ADDED : மார் 23, 2024 01:28 AM

புதுடில்லி, மறு பயன்பாட்டு ஏவு வாகனமான, 'புஷ்பக்' விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
மறு பயன்பாட்டு ஏவு வாகனமான புஷ்பக் விண்கலம், விமானத்தை போல இறக்கைகள் உடையது. இது, 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது. கடந்த 2016ல், இந்த விண்கலத்தின் முதல் சோதனை நடந்தது.
சிறகுகள்
தொடர்ந்து, 2023ல் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று, கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இருந்து, புஷ்பக் விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், 'புஷ்பக் என்றழைக்கப்படும் சிறகுகள் உடைய விண்கலம், இந்திய விமானப் படையின் சினுாக் ஹெலிகாப்டர் வாயிலாக துாக்கப்பட்டு, 4.5 கி.மீ., உயரத்தில் இருந்து கீழே விடுவிக்கப்பட்டது.
'ஓடுபாதையில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் விடுவிக்கப்பட்ட பின், சரியான பாதையில் சென்று புஷ்பக் விண்கலம் தரையிறங்கியது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நாட்டின் எதிர்கால மறுபயன்பாட்டு ஏவு வாகனமான புஷ்பக், சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பவும், சுற்றுப்பாதையில் இருந்து செயற்கைக்கோள்களை மீட்டெடுக்கவும் பயன்படும்.
முக்கிய பங்கு
இது தவிர, விண்வெளியில் குப்பையை குறைப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் செயல்பாட்டுக்கு வர பல ஆண்டு கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

