ADDED : ஆக 22, 2024 04:10 AM

தாவணகெரே: அரசு மருத்துவமனை வார்டுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் பரிதவித்தனர். நீரை வெளியேற்ற ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
தாவணகெரேவில் பரவலாக மழை பெய்கிறது. ஹொன்னாளியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், மக்கள் உறங்க முடியாமல் பரிதவித்தனர்.
பல லே - அவுட்களில் முழங்கால் அளவுக்கு, தண்ணீர் தேங்கி நின்றது. தனியார் பஸ் நிலையத்தில், 2 அடி அளவில் தண்ணீர் தேங்கியது. ஹொன்னாளி அரசு மருத்துவமனைக்குள், மழை வெள்ளம் புகுந்தது. அறுவை சிகிச்சை அறை, மருந்துகள் வழங்கும் அறை, பிரசவ வார்டு, ஐ.சி.யு.,வில் வெள்ளம் புகுந்தது. வார்டுகளில் இருந்த நோயாளிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
மருத்துவமனை அருகில் விளையாட்டு அரங்கம் உள்ளது. அக்கம், பக்கத்தில் சாக்கடை வசதி இல்லாததாலேயே, மழை வெள்ளம் மருத்துவமனைக்குள் புகுந்தது. மழை வெள்ளம் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்ததால், நோயாளிகள் பதற்றமடைந்தனர்.
தாவணகெரே, நாமதியின், ஆருன்டி கிராமத்தில் வசிக்கும் ஜவளி சுரேஷ், தன் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை, அறுவடை செய்யப்பட்ட தக்காளியை, பாக்ஸ்களில் நிரப்பும் போது, கன மழை பெய்து தக்காளிகள் அடித்துச் செல்லப்பட்டன. 25,000 ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.