ADDED : மே 03, 2024 07:03 AM

தங்கவயல்: தங்கவயலில் நேற்று மாலை திடீரென அரை மணி நேரம் கோடை மழை பெய்தது.
தங்கவயலில் நான்கு நாட்களாகவே வெப்ப அளவு 38 -- 40 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. இதனால், பலர் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். வெப்பத்தை தணிக்க மரங்களின் நிழலை தேடி சென்றனர். எங்குமே அனல் காற்று வீசியது.
வெப்பத்தின் தாக்கம் வரும் 4ம் தேதி வரை இருக்குமென மாநில வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது. குளிர் பானங்கள், இளநீர், பனை நுங்கு, தர்பூசணி, எலுமிச்சை விற்பனைக்கு மவுசு கூடியது.
இந்நிலையில் நேற்று மாலை 4:05 மணிக்கு திடீரென இடியுடன் லேசான மழை பெய்ய துவங்கியது. அரை மணி நேரம் தொடர்ந்து பெய்தது. சிறுவர்கள், மழையில் நனைந்து விளையாடினர். மழை நின்ற பின், தங்கவயல் முழுதும் வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது.
அனல் தனிந்து சில மணி நேரம் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தங்கவயலின் புறநகர் பகுதிகளான கேசம்பள்ளி, ராம்சாகர், சுந்தரபாளையா ஆகிய இடங்களிலும் கூட இடியுடன் மழை பெய்தது.
பங்கார்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெப்ப அளவு 40 டிகிரி செல்ஷியஸை தாண்டியது. பங்கார்பேட்டை தாலுகா பூதிக்கோட்டையில் தொடர்ந்து நான்கு நாட்களாக வெயில் கொளுத்தியது.
இங்குள்ள சில தனியார் கோழிப் பண்ணைகளில் வெப்பம் தாங்க முடியாமல், 2,000க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.
இத்தகவல் அறிந்த பங்கார்பேட்டை தாசில்தார் ரஷ்மி உட்பட வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்கள் உத்தரவுப்படி, இறந்த கோழிகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண்ணில் புதைக்க, நடவடிக்கை எடுத்தனர்.
அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மூலம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தாசில்தார் உறுதி அளித்தார்.