ராஜ்குமார் கனவு நிறைவேறும்: முதல்வர் சித்தராமையா உறுதி
ராஜ்குமார் கனவு நிறைவேறும்: முதல்வர் சித்தராமையா உறுதி
ADDED : ஜூன் 30, 2024 10:40 PM

பெங்களூரு: ''மைசூரில் திரைப்பட நகரம் அமைத்து, மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கனவு நிறைவேற்றப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தை நேற்று முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார். இதில், அவர் பேசியதாவது:
சினிமா தயாரிப்பாளர்களுக்கு இதுவரை சொந்த கட்டடம் இல்லை. தற்போது சொந்த கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் நடந்துள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இரவு 8:00 மணிக்கு தான் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதை முடித்து கொண்டு, இந்நிகழ்ச்சியை தவற விடக்கூடாது என்பதற்காகவே அவசரமாக புறப்பட்டு வந்தேன்.
கடந்த 1972 முதல் கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல நடவடிக்கைகளில் பங்கேற்று, மிகவும் கடினமான காலங்களை மீறி திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கன்னடத்துக்கென தனி 'ஓ.டி.டி.,' தளம் அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. கன்னட படங்களுக்கு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும்.
மைசூரு மாவட்டம் சித்ரா நகரில், 100 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கனவு நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தயாரிப்பாளர்கள் புதிய சங்க கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் சித்தராமையா கவுரவிக்கப்பட்டார். இடம்: பெங்களூரு.