ADDED : செப் 17, 2024 02:37 AM

ஹைதராபாத், நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடல் வாயிலாக தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி. இவர் மீது, அவருடன் பணியாற்றிய 21 வயது பெண் ஒருவர், தெலுங்கானா மாநிலத்தின் ராயதுர்கம் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.
இதில் அவர், 'சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் அவுட்டோர் படப்பிடிப்பின்போது ஜானி மாஸ்டர், எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளித்தார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, தெலுங்கானா போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் உடனடியாக நீக்கப்பட்டார்.
மலையாளத் திரையுலகில் நீதிபதி ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜானி மாஸ்டர் பற்றிய புகார் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.