முதியவர் களை விட்டு ஓடும் உறவுகள் பெலகாவி அரசு மருத்துவமனையில் அவதி
முதியவர் களை விட்டு ஓடும் உறவுகள் பெலகாவி அரசு மருத்துவமனையில் அவதி
ADDED : மார் 10, 2025 09:52 PM

பெலகாவி: உடல்நிலை பாதிப்படையும் பெற்றோரை, பெலகாவி மாவட்ட அரசு மருத்துவமனையில் தனியே தவிக்க விட்டு, குடும்பத்தினர் ஓடிப்போகும் சம்பவங்கள் அதிகரிப்பது, டாக்டர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது.
பெலகாவி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட, வயதான முதியவர் அல்லது மூதாட்டிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகின்றனர்.
இவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் குடும்பத்தினர், அங்கிருந்து இரவோடு, இரவாக ஓடி விடுகின்றனர்.
சில முதியோர் நல்லபடி குணமடைந்தாலும், அவர்களை அவர்களின் குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதில்லை. வயதான பெற்றோரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பிள்ளைகள் தப்பிவிடுகின்றனர்.
சில மூத்த குடிமக்கள், சிகிச்சை பெறும்போதே, அவர்களிடம் பிள்ளைகள் சொத்து பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஓடுகின்றனர்.
மருத்துவமனை ஊழியர்கள், போலீசாரின் உதவியுடன், முதியவர் அல்லது மூதாட்டியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, பெற்றோரை அழைத்துச் செல்லும்படி கூறினாலும் பொருட்படுத்துவது இல்லை.
பெலகாவி மாவட்ட மருத்துவமனை, முதியோர் இல்லமாக மாறுகிறது என, டாக்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், 152 வழக்குகள் பதிவாகியுள்ளன.
குணமடைந்த பின்னரும் அழைத்துச் செல்ல வராத வெளிமாநிலத்தின் குடும்பத்தினரை கண்டுபிடித்து, 17 முதியவர்களை மருத்துவமனை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
கர்நாடகாவின் பல்வேறு இடங்களை சேர்ந்த 73 முதியோரை வீட்டில் சேர்த்தனர். பிள்ளைகள் இல்லாத, இருந்தும் சரியாக பார்த்துக் கொள்ளாத 62 முதியவர்கள், முதியோர் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.
பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் சரோஜினி திகடி கூறியதாவது:
மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, மூத்த குடிமக்கள் குணமடைந்த பின்னரும், அவர்களின் உறவினர்கள் அழைத்துச் செல்வது இல்லை. இது குறித்து, மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். அவரும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியாத சிலரை, முதியோர் இல்லத்தில் சேர்த்தோம்.
பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட, பொது இடங்களில் காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட முதியோரின் உறவினர்களுக்கு, தகவல் தெரிவித்துள்ளோம்.
சிலர் மட்டும் தங்களின் பெற்றோரை மகிழ்ச்சியோடு அழைத்துச் சென்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.