மைசூரு லோக்சபா தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியீடு
மைசூரு லோக்சபா தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியீடு
ADDED : ஏப் 23, 2024 05:20 AM

மைசூரு : மைசூரு தொகுதி வளர்ச்சிக்காக, மாவட்ட காங்கிரசார் பல வளர்ச்சி பணிகள் கொண்ட தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
மைசூரு காங்கிரஸ் பவனில் நேற்று தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, நரசிம்மராஜா எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் மைசூரு தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. முந்தைய எம்.பி.,க்கள் முந்தைய வாக்குறுதிகள் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், அவை எதுவும் செய்யவில்லை.
எங்கள் கட்சி வேட்பாளர் லட்சுமண் உருவாக்கிய தனி தேர்தல் அறிக்கைக்கு, கட்சி மேலிடம் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. சட்டசபை தேர்தலின் போது அளித்த ஐந்து வாக்குறுதியையும் நிறைவேற்றி உள்ளோம்.
தொகுதியை எப்படி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என்பதை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளோம். தொகுதி வளர்ச்சிக்கு முந்தைய எம்.பி.,க்களுக்கு ஆலோசனைகள் வழங்கினோம். ஆனால் எதற்கும் பதிலளில்லை. நேரடி விவாதத்துக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தும் வரவில்லை. எங்கள் வேட்பாளர், மக்களின் கனவை நனவாக்க நிற்கிறார்.
மக்களின் உணர்வுகளுடன் பா.ஜ., விளையாடுகிறது. நாடு முழுதும் அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் போராடி வருகிறது. முஸ்லிம்களை குறிப்பிடாமல் பா.ஜ.,வினரால் அரசியல் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
யதீந்திரா பேசுகையில், ''பல ஆண்டுகளாக கட்சியின் மக்கள் நல போராட்டங்களில் லட்சுமண் பங்கேற்றுள்ளார். தேர்தல் அறிக்கை மூலம் ஓட்டு கேட்காமல், ஜாதி, மதம் அடிப்படையில் பா.ஜ.,வினர் ஓட்டு கேட்கின்றனர். எனவே, எங்களுக்கு மக்களின் ஆதரவு இருப்பது உறுதியாக தெரிகிறது,'' என்றார்.
மைசூரு லோக்சபா தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையுடன் காங்கிரஸ் தலைவர்கள். இடம்: கட்சி அலுவலகம், மைசூரு.

