ADDED : மே 03, 2024 11:23 PM
பெங்களூரு : 'கர்நாடகாவின் வட மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால், ஓட்டுப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகளிடம் பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடகாவின் வட மாவட்டங்களின், 14 லோக்சபா தொகுதிகளுக்கு மே 7ல், இரண்டாம் கட்டத்தில் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இந்த மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
தினமும் 'ஏசி' கார்களில் செல்லும் அரசியல் தலைவர்கள், தேர்தலுக்காக கொளுத்தும் வெயிலில் ஓட்டு கேட்டு அலைகின்றனர்.
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், ஓட்டுப் பதிவு சதவீதம் குறையலாம். பல மாவட்டங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்ஷியஸாக உள்ளது. இதனால் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வருவது கஷ்டமாக இருக்கும். வாக்காளர்கள் பட்டியலில் 40 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். இவர்களும் வெப்பத்தால் பாதிப்படைவர்.
எனவே ஓட்டுப்பதிவு நேரத்தை, ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.,வினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.