ஓய்வு எம்.எல்.என்.எல் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை
ஓய்வு எம்.எல்.என்.எல் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை
ADDED : ஆக 03, 2024 08:58 PM
புதுடில்லி:ஓய்வு பெற்ற எம்.டி.என்.எல்., நிறுவன ஊழியர் நேற்று அதிகாலையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
கிழக்கு டில்லி நியூ அசோக் நகரில் வசித்தவர் கவுதம் தாக்குர்,72. எம்.டி.என்.எல்., எனப்படும் மஹாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட்டில் மெக்கானிக்கான பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மனைவி, இரண்டு மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்தார். இரவில் மட்டும் முதல் தளத்தில் உள்ள படுக்கையறைக்கு செல்வார்.
நேற்று காலை நீண்ட நேரமாக எழுந்து வரவில்லை என்பதால், அவரது மூத்த மகன் முகேஷ் தாக்குர் மாடிக்கு சென்றார். படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கவுதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
நியூ அசோக் நகர் போலீசார் விரைந்து வந்தனர். கவுதம் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.
கொலை நடந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் அனைவருமே வீட்டில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ஆனால், இரண்டு ஆண்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து இறங்கிச் சென்றதாக முகேஷ் தாக்குர் கூறினார். அந்தத் தெருவில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நியூ அசோக் நகரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.