UPDATED : மே 04, 2024 09:16 AM
ADDED : மே 04, 2024 01:52 AM

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலையில் பிஹெச்.டி., படிப்பு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016ல் தற்கொலை செய்து கொண்டார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., உடனான மோதலும், ஜாதி வேறுபாடும் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீசார், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ரோஹித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவரின் தந்தை ஓ.பி.சி., இனத்தைச் சேர்ந்தவர்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ரோஹித்தின் தாய் ராதிகா, உண்மையை மறைத்து போலி சான்றிதழ் பெற்றுள்ளார்.
உண்மையான ஜாதி அடையாளம் வெளியே தெரிந்து பிரச்னைகளை ஏற்படுத்தும் என்ற பயத்தில் ரோஹித் தற்கொலை செய்துள்ளார். இதற்கு யாரும் காரணம் அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ரோஹித் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
