ADDED : ஆக 03, 2024 11:17 PM

சித்தாபூர்: பெங்களூரில் அதிகாலையில் ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ரவுடிகளை, போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு, சித்தாபூர் அதீக் மசூதி பகுதியில் வசித்தவர் சையது ஈசாக், 31. ரவுடியான இவர் மீது சித்தாபூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இவருக்கும், எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ரவுடியான வெங்கடேசன், 28, என்பவருக்கும், முன்விரோதம் இருந்தது.
ரவுடி வெங்கடேசனுக்கு இடது கை கிடையாது. இதனால் அவர், 'ஒற்றை கை' வெங்கடேசன் என்று அழைக்கப்படுகிறார்.
வெங்கடேசன் வீடு உள்ள பகுதியில் வசிக்கும், சிறுவர்களுக்கு சையது ஈசாக், கஞ்சா விற்றுள்ளார். இதற்கு வெங்கடேசன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் வெங்கடேசனை கொலை செய்ய உள்ளதாக, சையது ஈசாக் மிரட்டியுள்ளார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அதீக் மசூதி அருகே, சையது ஈசாக் நடந்து சென்றார். அவரை வெங்கடேசனும், அவரது கூட்டாளி ஒருவரும் சுற்றி வளைத்து, கத்தியால் குத்திவிட்டு தப்பினர். வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த, சையது ஈசாக் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
முன்விரோதம், சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதால் கொலையானதாக கூறப்பட்டாலும் பெண் விவகாரம் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.