விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.9 கோடி அபராதம்
விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.9 கோடி அபராதம்
ADDED : ஆக 29, 2024 01:09 AM
பாட்னா, பீஹாரில் தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு, ஒரே வாரத்தில் 16,700 இ - சலான்கள் வாயிலாக, 9.49 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், சுங்கச் சாவடிகளில் தானியங்கி முறையில் வாகனங்களை சோதனை செய்யும் முறை பீஹாரில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு உள்ள 13 சுங்கச் சாவடிகளில், கடந்த 7 - 15ம் தேதி வரை மின்னணு வாயிலாக வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, வாகனத்தின் காப்பீடு ஆவணம், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் உள்ளிட்டவை எலக்ட்ரானிக் முறையில் சோதனை செய்யப்பட்டன.
மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர்களின் மொபைல் போன்களுக்கு, அபராதத்துக்கான இ - சலான் அனுப்பப்பட்டன.
இது குறித்து, பீஹார் மாநில ஏ.டி.ஜி.பி., சுதன்ஷூ குமார் கூறியதாவது:
போக்குவரத்து துறையின் உதவியுடன், 13 சுங்கச்சாவடிகளில் மின்னணு சோதனை வாயிலாக இ - சலான் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி கடந்த 7 - 15 வரையிலான காலகட்டத்தில், 16,500 இ - சலான்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. பீஹாரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 7,079 சலான்களும், பிற மாநில வாகனங்களுக்கு 9,676 சலான்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மொத்த அபராதத் தொகை 9.49 கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.

