ADDED : மே 19, 2024 11:42 PM

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில், ஷூ வர்த்தகர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 40 கோடி ரூபாய் ரொக்கம் பிடிபட்டது.
உ.பி., மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஷூ வர்த்தகர்கள் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில், நேற்று ஆக்ராவில் உள்ள மூன்று ஷூ வர்த்தகர்களின் வீடுகள் மற்றும் லக்னோ, கான்பூரில் உள்ள அவர்களது அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒருவரது வீட்டில் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 500 ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வங்கி அதிகாரிகள் முன்னிலையில், பணம் எண்ணும் இயந்திரம் வைத்து அவற்றை எண்ணும் பணி நள்ளிரவை தாண்டி நடந்தது.
இதில் கணக்கில் வராத பணம், 40 கோடி ரூபாய் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அவற்றை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

