ADDED : ஏப் 09, 2024 06:31 AM
பெங்களூரு: பெங்களூரில் காலரா பாதிப்பு அதிகரிப்பதால், மாநகராட்சி விழிப்படைந்துள்ளது. இதைத் தடுக்க மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரில் சில நாட்களாக காலரா வேகமாக பரவுகிறது. பெங்களூரு மருத்துவ கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த, 49 மாணவியருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் இரண்டு மாணவியருக்கு, காலரா தொற்று உறுதியானது.
பொதுமக்களுக்கும் பரவுகிறது. இதை தடுக்க பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. விதிகளை வெளியிட்டு, இவற்றை பின்பற்றும்படி உத்தரவிட்டுள்ளது. வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு செல்லும்படி உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
ஹோட்டல்களில் உணவு துாய்மையாக, சுகாதாரமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்து, ஆறிய நீரை வழங்குவது கட்டாயம்
சுகாதார அதிகாரிகள், ஹோட்டல், கடைகளில் சோதனையிட வேண்டும்
உணவு, குடிநீர் தரமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
கோடை காலத்தில் ஏற்படுத்தும் தொற்றுநோய்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
சாலை ஓரங்களில் வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், திறந்து வைக்கப்பட்ட உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும்
சுகாதார அதிகாரிகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தொற்றுநோயாளிகள் குறித்து, தினமும் அறிக்கை பெற வேண்டும்
குடிநீரை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குடிக்க தகுதியானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
பொதுமக்கள் கொதித்து, ஆற வைத்த குடிநீரையே குடிக்க வேண்டும்
பொதுக்குழாய்கள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும்
தரமான, புதிதான காய்கறிகள், பழங்களை பயன்படுத்த வேண்டும்
உணவருந்துவதற்கு முன்பு, கைகளை நன்றாக கழுவ வேண்டும்
15 நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர் தொட்டியை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

