ADDED : ஏப் 09, 2024 05:15 AM
சபரிமலை : சபரிமலையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை விஷு. இதற்காக நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஏப்.,11 அதிகாலை 5:00 மணி முதல் பூஜைகள் தொடங்கும். தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.
ஏப்., 14 அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து விஷு கனி தரிசனம் நடைபெறும். ஐயப்பன் விக்ரகத்தின் முன்னால் காய்கனி பூக்கள் அடுக்கி வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வர். பக்தர்களுக்கு தந்தரியும் மேல் சாந்தியும் கை நீட்டம் வழங்குவர். ஏப்., 18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சித்திரை விஷு விழாவுக்கு கேரளாவிலிருந்து அதிகமான பக்தர்கள் சபரிமலை வருவார்கள் என்பதால் திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரை, எருமேலி கேரளாவின் பல்வேறு பகுதியில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு நடக்கிறது.
