ADDED : ஆக 15, 2024 04:19 AM

சபரிமலை : ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை(ஆக.,16) மாலை திறக்கப்படுகிறது. அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்கிறார். கீழ் சாந்தி தேர்வும் நடக்கிறது.
இங்கு நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கும் தந்திரி பொறுப்பு தாழமண் குடும்பத்திடம் உள்ளது. இக்குடும்பத்தில் தற்போது கண்டரரு ராஜீவரரு , மகேஷ் மோகனரரு என இரண்டு தந்திரிகள் உள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் தந்திரி பொறுப்பை நிர்வகிக்கின்றனர்.
2023 ஆகஸ்ட் முதல் தந்திரி பொறுப்பு வகித்து வந்த மகேஷ் மோகனரரு சுற்று முடிந்த நிலையில் இன்று முதல் தந்திரி பொறுப்பை கண்ட ரரு ராஜீவரரு ஏற்கிறார். அவருடன் அவரது மகன் பிரம்ம தத்தனும் பூஜைகளில் கலந்து கொள்கிறார்.
![]() |
நாளை மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் ராஜீவரரு மற்றும் பிரம்ம தத்தன் ஆகியோர் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து பூஜைகளை தொடங்கி வைப்பர். அதை தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 7:00 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12:30 மணி-க்கு உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை நடைபெறும்.
சபரிமலையில் ஐயப்பனுக்கு நிவேத்யங்கள் செய்யவும், பூஜைகளில் உதவுவதற்கும் நியமிக்கப்படும் கீழ் சாந்தி குலுக்கல் தேர்வு நாளை மறுநாள் காலை 8:00 - மணிக்கு நடைபெறுகிறது.
எல்லா நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜையும், இரவு 7:00 -க்கு படி பூஜையும் நடைபெறும். பூஜைகள் முடிந்து ஆக. 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.