மணல் குவாரி வழக்கு: கலெக்டர்களை துன்புறுத்துவதா?: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
மணல் குவாரி வழக்கு: கலெக்டர்களை துன்புறுத்துவதா?: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
UPDATED : மே 06, 2024 05:34 PM
ADDED : மே 06, 2024 05:27 PM

புதுடில்லி: மணல் குவாரி வழக்கில் தமிழக கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை தேவையின்றி தொந்தரவு தரக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, தமிழக அரசுத்துறை உயர் அதிகாரிகள், வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (மே 06) விசாரணைக்கு வந்தது. அப்போது, “மணல் குவாரி வழக்கில் மாவட்ட கலெக்டர்களிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால், தேவையில்லாமல் மாவட்ட கலெக்டர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது. கலெக்டர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. இவ்வாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.