சந்தன மரம் கடத்தியவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
சந்தன மரம் கடத்தியவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
ADDED : ஜூலை 02, 2024 09:36 PM

கோலார் : வனப்பகுதியில் இருந்து சந்தன மரம் வெட்டி கடத்தியவரை, வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கோலார், முல்பாகல் காசிபுரா கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து, சந்தன மரத்தை வெட்டி மர்ம நபர்கள் அடிக்கடி கடத்தி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, காசிபுரா கிராமத்தின் அருகே, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு ஆட்டோ வந்தது. ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, சந்தன மரக்கட்டைகள் இருந்தன.
ஆட்டோவில் இருந்த ஐந்து பேரை, வனத்துறையினர் கைது செய்ய முயன்றனர்.
அப்போது வனத்துறையினரை தாக்கி விட்டு, சந்தன மரம் கடத்தியவர்கள் தப்பிக்க முயன்றனர்.
அதில் நான்கு பேர் தப்பித்தனர். ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். அவரும் தனது கையில் வைத்திருந்த கத்தியால், வன ஊழியர்களை தாக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட வன அதிகாரி அனில் சித்தராமப்பா, துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு துளைத்தது. சுருண்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் முல்பாகல் அருகே தாயலுார் கிராமத்தை சேர்ந்த பத்தியப்பா, 25 என்பது தெரிந்தது. தப்பி சென்றவர்கள் தாயலூர் கிராமத்தின் சைனப்பா, 30, ரவி, 25, சுரேஷ், 30, மகேந்திரா, 35 என்பதும் தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.