சசி தரூருக்கு சனி திசை இருக்கு; சமூக வலைதள பதிவால் வெடித்தது சர்ச்சை
சசி தரூருக்கு சனி திசை இருக்கு; சமூக வலைதள பதிவால் வெடித்தது சர்ச்சை
ADDED : ஆக 04, 2024 07:18 AM

புதுடில்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சசி தரூர், 'மறக்க முடியாத நாள்' என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை கொட்டியதால் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 361 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் உதவி வழங்கச் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் சசி தரூர் பகிர்ந்துள்ளார்.
உருக்கம்
'வயநாடு மக்களுக்கு உதவி செய்தது மறக்க முடியாத நாள். மறக்க முடியாத ஒன்று எப்போதும் நினைவில் இருக்கும். ஏனெனில் அது சிறப்பு அல்லது மறக்க முடியாதது' என சசி தரூர் உருக்கமாக கூறியுள்ளார்.
மோசமான பாதிப்பு ஏற்பட்டு நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தை, 'மறக்க முடியாத நாள்' என்று சசி தரூர் குறிப்பிட்டதற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.