ரேவண்ணாவுக்கு எதிராக சதி ம.ஜ.த., லிங்கேஷ் குற்றச்சாட்டு
ரேவண்ணாவுக்கு எதிராக சதி ம.ஜ.த., லிங்கேஷ் குற்றச்சாட்டு
ADDED : மே 07, 2024 06:18 AM
ஹாசன்: ''பெண்களின் மானத்தை களங்கப்படுத்தியவர்களை விட்டு விட்டு, ரேவண்ணாவை சிக்க வைக்க, பெண் கடத்தல் வழக்கை பயன்படுத்துகின்றனர்,'' என, ஹாசன் மாவட்ட ம.ஜ.த., தலைவர் லிங்கேஷ் குற்றம் சாட்டினார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவை, உள் நோக்கத்துடன், பெண் கடத்தல் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணுடன் கே.ஆர்.நகர் ரவிசங்கரும் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆபாச வீடியோவை பரப்பியவர்களை கைது செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் மாவட்ட தலைவர்களுடன், ஆலோசனை நடத்தினோம். பென் டிரைவ் விஷயமாக விசாரணை நடத்த எஸ்.ஐ.டி., அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் எஸ்.ஐ.டி., விசாரணை திசை மாறுகிறது. பெண்களின் மானத்தை களங்கப்படுத்தியோரை விட்டு விட்டு, ரேவண்ணாவை கைது செய்ய வைத்துள்ளனர். அவர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பத்மநாப நகரில் ரேவண்ணா பதுங்கி இருந்ததாக கூறுவது பொய். எஸ்.ஐ.டி., அதிகாரிகள், ரேவண்ணாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பை கொடுப்பார். அவர்கள் குடும்பத்தின் கவுரவத்தை குலைத்தால், நாங்கள் வளரலாம் என, நினைத்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கட்டும். ஆனால் அதை விட்டு விட்டு, ரேவண்ணாவை கைது செய்திருக்க கூடாது.
இத்தகைய அரசியல் சதியை நாங்கள் கண்டிக்கிறோம். பள்ளத்தில் விழுந்தால், ஆளுக்கு ஒரு கல் எறிவர். எஸ்.ஐ.டி., சரியான ரீதியில் விசாரணை நடத்த வேண்டும். ஹொளேநரசிபுரா தொகுதியில், ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ரேவண்ணா. அவர் எங்கும் ஓடமாட்டார். விசாரணைக்கு அழைத்தால் வருவார். எனவே உடனடியாக அவரை, விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.