ADDED : மே 30, 2024 12:32 AM

புதுடில்லி : தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள, ஜே.என்.யு., பல்கலை முன்னாள் மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமின் வழங்கி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, 2019ல், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு எதிராக, 2020ல் டில்லி உட்பட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
அப்போது, டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில், பிஎச்.டி., படித்த ஷர்ஜீல் இமாம் என்ற மாணவர், டில்லி ஜாமியா பல்கலை மற்றும் உ.பி.,யின் அலிகர் பல்கலையில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றார்.
இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், நாட்டுக்கு விரோதமாகவும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதன்படி, ஷர்ஜீல் இமாம் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஷர்ஜீல் இமாம் மீது தேச துரோக வழக்கை டில்லி சிறப்பு போலீசார் பதிவு செய்தனர்.
பின், 'உபா' எனப்படும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2020 ஜன., 28 முதல், அவர் காவலில் உள்ளார்.
'கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 'உபா' சட்டத்தின்படி, அதிகபட்ச தண்டனையே, ஏழு ஆண்டுகள் தான். எனவே, ஜாமின் வழங்க வேண்டும்' என, விசாரணை நீதிமன்றத்தில், ஷர்ஜீல் இமாம் மனு தாக்கல் செய்தார்.
இதை, கடந்த பிப்., 17ல் விசாரித்த நீதிமன்றம், ஜாமின் வழங்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், ஷர்ஜீல் இமாம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த 2020ல், சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததற்கு, ஷர்ஜீல் இமாம் காரணம் என்றும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
உபா வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், அவரது சிறைவாசம் தொடர்கிறது.