கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 4,950 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 4,950 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ADDED : செப் 13, 2024 02:00 AM

கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கலால் துறையினர் சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு சிக்கணாம்பாறை பகுதியில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த, 1,650 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கைது செய்த மூவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் -- கேரளா எல்லையில், எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லையில், ஆனைமலை அருகே, செம்மணாம்பதியில் உள்ள தென்னந்தோப்பில் சோதனை நடத்தினர்.
தென்னந்தோப்பில், மூன்று இடங்களில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த, 150 கேன்களில் இருந்து, 4,950 லிட்டர் எரிசாராயத்தைக் கண்டுபிடித்தனர். தென்னந்தோப்பு, தமிழகத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்ததால், பறிமுதல் செய்த எரிசாராயத்தை, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, கேரள கலால் துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ் கூறும்போது, ''கேரள மாநிலத்தில், தென்னங்கள்ளில் போதைத் தன்மையை அதிகரிக்க, எரிசாராயம் கலப்படம் செய்கின்றனர்,'' என்றார்.
எரிசாராயம் பதுக்கி வைத்திருந்து, தப்பியோடிய நபர் குறித்து, ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-- நிருபர் குழு -

