குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்
குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்
UPDATED : ஆக 21, 2024 06:41 AM
ADDED : ஆக 21, 2024 01:09 AM

மும்பை: உலகளவில், 'எம் - பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வரும் நிலையில், அந்த தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில், 'சீரம் இந்தியா' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது.
நடவடிக்கை
இதையடுத்து இந்த தொற்றை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கையாக, சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. நம் நாட்டுக்கு வரும் சர்வதேச பயணியருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா, நேற்று பேட்டி ஒன்றில் கூறுகையில், “ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும்,” என்றார்.
கோவிஷீல்டு
கடந்த 2019 இறுதியில், சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று, நம் நாடு உட்பட உலகையே ஆட்டிப் படைத்தது.
இந்தத் தொற்றுக்கான, 'கோவிஷீல்டு' தடுப்பூசியை, சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

