கர்ப்பிணியை இரவு வரை காத்திருக்க வைத்த சம்பவம் சேஷாத்திரிபுரம் போலீசாருக்கு கடும் கண்டனம்
கர்ப்பிணியை இரவு வரை காத்திருக்க வைத்த சம்பவம் சேஷாத்திரிபுரம் போலீசாருக்கு கடும் கண்டனம்
ADDED : பிப் 22, 2025 05:22 AM

சேஷாத்திரிபுரம்: விசாரணை என்ற பெயரில், கர்ப்பிணியை இரவு வரை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த சேஷாத்திரிபுரம் போலீசாரின் செயலை பலரும் கண்டித்து உள்ளனர்.
பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு நான்கு மாத கர்ப்பிணி ஒருவர், நேற்று முன் தினம் மதியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள கணவருடன் வந்திருந்தார்.
கர்ப்பிணியின் ஆதார் கார்டை ஆய்வு செய்த போது, அவருக்கு 18 வயது என்பது தெரிந்தது. 18 வயதுக்கு முன்பே அவருக்கு திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் பெண்ணையும், அவரது கணவரையும் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி, போலீசார் அழைத்தனர்.
தம்பதியும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். மதியம் 2:00 மணிக்கு வந்த தம்பதியை, இரவு 10:00 மணிக்கு மேலாகியும் அனுப்பவில்லை. தேவையின்றி காலதாமதம் செய்தனர். விசாரணையும் நடத்தவில்லை; அனுப்பவும் இல்லை.
மாலை 6:00 மணிக்கு பின், எந்த பெண்ணையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது; வைத்திருக்கவும் கூடாது. ஆனால் சேஷாத்திரிபுரம் போலீசார், கர்ப்பிணியை இரவு வரை வைத்திருந்ததை, பலரும் கண்டித்துள்ளனர். தகவலறிந்து ஊடகத்தினர் வந்த பின்னரே, போலீசார், கர்ப்பிணியை மகளிர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பினர்.
விசாரிக்க உத்தரவு
கூடுதல் கமிஷனர் விகாஸ் குமார் கூறுகையில், ''கர்ப்பமான பெண்ணுக்கு 18 ஆண்டு ஒரு மாதம் 20 நாட்கள் மட்டுமே கடந்துள்ளது. ஆனால், ஏற்கனவே நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக மருத்துவமனையினர் அனுப்பிய தகவலின்படி போலீசார், விசாரணைக்கு அழைத்து உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வருகின்றனர். யாரும் புகாரும் அளிக்கவில்லை.
''ஆனாலும் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதவேளையில், கர்ப்பிணி பெண்ணை, குறிப்பிட்ட நேரத்துக்கும் மேலாக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்நது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.

