பாலியல் புகார்: மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்
பாலியல் புகார்: மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்
UPDATED : மே 04, 2024 04:34 PM
ADDED : மே 04, 2024 04:18 PM

கோல்கட்டா: கவர்னர் ஆனந்த போஸ் மீது பெண்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக, மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தில், கவர்னருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மம்தா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னர் முன்வைத்து வருகிறார்.
கவர்னர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை கவர்னர் ஆனந்த போஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பெண்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக, மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. சம்மனில் மேற்கு வங்க மாநிலத்தில் ஹரே தெரு போலீஸ் ஸ்டேஷனில் 4 பேரும் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.