பிரதமரின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்!
பிரதமரின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்!
UPDATED : பிப் 22, 2025 08:31 PM
ADDED : பிப் 22, 2025 06:02 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் இரண்டாவது முதன்மை செயலாளராக, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னருமான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.
40 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் நிதித்துறை, வரித்துறை, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் 2வது முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸை நியமனம் செய்து அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் பதவி காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் இந்தப் பதவில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நிதி ஆயோக்கின் சி.இ.ஓ.,வாக செயல்பட்டு வந்த பி.வி.ஆர்.சுப்ரமணியத்தின் பதவி காலமும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

