ADDED : ஜூலை 16, 2024 01:09 AM

காத்மாண்டு: நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி, 72, நான்காவது முறையாக நேற்று பதவியேற்றார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியில் அங்கம் வகித்த முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, தன் ஆதரவை திரும்ப பெற்றது.
இதனால் பெரும்பான்மை பலத்தை இழந்த பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு, அந்நாட்டின் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து, நேபாள காங்கிரஸ் கட்சியும், நேபாள கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைக்க நடவடிக்கை எடுத்தன.
இதைத்தொடர்ந்து, புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம், சர்மா ஒலி உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம் சந்திர பவுடல், நேபாள நாட்டின் புதிய பிரதமராக சர்மா ஒலியை நேற்று முன்தினம் நியமித்தார்.
இதையடுத்து, நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக சர்மா ஒலி நேற்று பதவியேற்றார்.
அவருடன் இரண்டு துணை பிரதமர்கள், 19 அமைச்சர்கள் பதவியேற்றனர். நேபாள பிரதமராக பதவியேற்ற சர்மா ஒலிக்கு, நம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் அரசியலமைப்பு சட்டவிதிகளின்படி, 30 நாட்களுக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பார்லி.,யில் ஆளும் அரசு தங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்.
இதன்படி, மொத்தம் உள்ள 275 உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிக்க, 138 பேரின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது.
தற்போது, பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு, 165 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. பிரதமராக பதவியேற்றுள்ள சர்மா ஒலி, சீன ஆதரவு கொள்கை உடையவர்.

