ADDED : செப் 09, 2024 05:39 AM
ஷெட்டிஹள்ளி, பத்ரா வனப்பகுதிகளை விஸ்தரிக்கும்படி, கர்நாடக அரசுக்கு, தேசிய வனவிலங்கு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தேசிய வனவிலங்கு வாரியத்தின், 79வது நிலைக்குழு கூட்டம், மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில், சமீபத்தில் புதுடில்லியில் நடந்தது.
அப்போது, ஷிவமொகாவில் உள்ள ஷெட்டிஹள்ளி வனவிலங்கு சரணாலயம் மற்றும் சிக்கமகளூரு பத்ரா புலிகள் காப்பகம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, இரண்டு வனப்பகுதிகளையும் விரிவாக்கம் செய்யும்படி, தேசிய வனவிலங்கு வாரியம், கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.
ஆனால், இரண்டும் ஒன்றுக்கொன்று வெவ்வேறு திசைகளில் இருப்பதால், விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஷெட்டிஹள்ளி வன விலங்கு சரணாலயத்தை, 700 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்து, 395 சதுர கி.மீ., பரப்பளவாக குறைக்கும்படி, கர்நாடக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்க மறுத்த தேசிய வனவிலங்கு வாரியம், அருகில் உள்ள சிறிய சிறிய வனப்பகுதிகளை இணைத்து, வனப்பகுதியை கட்டாயம் விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி திட்டவட்டமாக தெரிவித்தது.
ஷெட்டிஹள்ளி, பத்ரா வனப்பகுதிகளில், புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உட்பட ஏராளமான வன விலங்குகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.