சிவாஜி சிலை சேதம்: ஒப்பந்ததாரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்
சிவாஜி சிலை சேதம்: ஒப்பந்ததாரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்
UPDATED : செப் 04, 2024 10:43 AM
ADDED : செப் 03, 2024 09:40 PM

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சேதம் அடைந்த சிவாஜி சிலையை உருவாக்கிய ஒப்பந்ததாரருக்கு லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆக.,26-ம் தேதி ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜிசிலை ஒன்று கீழே விழுந்து சேதமானது. பிரதமர் மோடி கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் இந்த சிலையை திறந்து வைத்திருந்தார். விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது இச்சூழ்நிலையில் சிலை கீழே விழுந்த சம்பவம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே மால்வான் பகுதி போலீசார் சிலைவடிவமைத்த சிற்பியான தானே வை சேர்ந்த ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகரான சேத்தன் பாட்டீல் உள்ளிட்டோர் மீது அலட்சியம் மற்றும் பிற குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் சிலை ஒப்பந்ததாரரான ஜெய்தீப் ஆப்தேவுக்கு எதிராக போலீசார் லுக்அவுட் நோட்டீசை வெளியிட்டு உள்ளனர்.
முன்னதாக சிலை உடைப்பு சம்பவத்திற்கு இந்திய தாயின் மகனான சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல. சிவாஜி எனக்கு கடவுள் போன்றவர். காற்று, மழையில் சிலை சேதமடைந்ததற்கு எனது கடவுள் சிவாஜியிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.