ADDED : ஆக 22, 2024 01:59 AM

ஹூப்பள்ளி, “ரவுடியான என் மகனால் மானம், மரியாதை போய்விட்டது; அவனை சுட்டுக் கொல்லுங்கள்,” என, போலீஸ் கமிஷனரிடம் ரவுடியின் தந்தை கண்ணீர்விட்டு கதறினார்.
கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி, கசபாபேட்டையைச் சேர்ந்தவர் முகமது கவுஸ், 65; சைக்கிளில் டீ வியாபாரம் செய்கிறார். இவரது மகன் அப்தாப் கரிகுட்டா, 35. ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அப்தாபும், அவரது கூட்டாளிகளும், எதிர்கோஷ்டி ரவுடி கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு சென்ற போலீசார், அப்தாபை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற அப்தாபை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
நேற்று காலை அப்தாப் வீட்டிற்கு, ஹூப்பள்ளி - தார்வாட் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் சென்றார்.
அப்தாபின் தந்தை முகமது கவுசிடம், “உங்கள் மகனுக்கு பாடம் புகட்டுங்கள்; இல்லாவிட்டால் நாங்கள் புகட்டுவோம்,” என்றார்.
அப்போது சசிகுமாரின் கையை பிடித்துக் கொண்டு, “என் மகனால் மானம், மரியாதை போய்விட்டது; தயவு செய்து அவனை சுட்டுக் கொல்லுங்கள்,” என, முகமது கவுஸ் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சசிகுமார், முகமது கவுசை சமாதானப்படுத்தினார்.